மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கைப்பற்றியதற்கு ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியாவின் பங்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா படைத்திருந்தார்.
மொத்தமாக அவர் 257 ரன்கள் அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 156 என்ற அளவில் இருந்தது. இதில் மூன்று அரை சதம் அடங்கும். இதேபோன்று ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சிறப்பாக ஜொலித்தார்.

144 ரன்கள் எடுத்த அவர் பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா இறுதிப்போட்டியில் வீசிய ஓவர் தான் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கேப்டன் ரோகித் சர்மா அவரை பாராட்டி இருந்தார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை மோதல் இருந்தது.
இதற்கு காரணம் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டது தான். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து கொண்டுவரப்பட்டு கேப்டனாக அமர்த்தபட்டார். இது ரோகித் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு காய் நகர்த்துவிட்டதாக எண்ணி ரோகித் சர்மாவும் அவரிடம் பேசாமல் இருந்தார்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி தொடங்கிய முதல் நாளில் ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் பேசிக்கொள்ளவில்லை என அந்த தொடரை நேரில் சென்று கண்காணித்த பத்திரிகையாளர் விமல் குமார் என்பவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், டி20 உலக கோப்பை தொடரை கவர் செய்வதற்காக தான் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு சென்றேன்.
இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் என்ன செய்கிறார்கள் என்பதிலே எனது கவனம் இருந்தது. முதல் நாள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. ரோகித் ஒரு இடத்தில் இருந்தால், ஹர்திக் பாண்டியா வேறொரு இடத்தில் இருப்பார். ஆனால் இரண்டாவது நாள் பயிற்சியின்போது நிலைமை கொஞ்சம் மாறியது.
ரோகித்தும் ஹர்திக் பாண்டியாவும் பயிற்சியின்போது பேசிக் கொண்டனர். மேலும் சில நேரத்துக்கு பிறகு இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசினார்கள். அதன்பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது ரோகித் சர்மா சில மாற்றத்தை கூறினார். முதல் நாளில் இருவரும் பேசவே இல்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் நல்ல நண்பர்கள் போல் நடந்து கொண்டனர்.இதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான். அவர்தான் வீரர்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறார். இரண்டு வீரர்களையும் எப்படி கையாள்வது என்று டிராவிடக்கு நன்றாகவே தெரியும். அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த டிராவிட் அனைவரையும் ஒன்றாக இணைத்து கோப்பைக்காக போராட வேண்டும் என்ற உத்வேகத்தை டிராவில் தான் விதைத்தார்.
டிராவிடன் இந்த தலைமை பண்பால் தான் இந்தியா டி20 உலக கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கையை தமக்கு அப்போது வந்தது. அந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் எந்த ஒரு பதற்றமும் இன்றி மகிழ்ச்சியாக பயிற்சியை மேற்கொண்டனர் என்று பத்திரிக்கையாளர் விமல் குமார் கூறியிருக்கிறார்.