லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நன்றாக ஆடி வந்த ரோகித் சர்மா மற்றும் புஜாரா இருவரும் தேவையில்லாத ஷாட் விளையாடி ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணிக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் இழந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 444 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 418 ரன்களே இதுவரை வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட இலக்காகும். இதனால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த சாதனை இலக்கை இந்திய அணி எட்டிப்பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளாக விளாசி அசத்தினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் போலாந்த் வீசிய பந்தில் கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து சுப்மன் கில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீனின் கேட்ச் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரோகித் சர்மா - புஜாரா கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியை தொடர்ந்தனர்.
புஜாராவும் தன் பங்கிற்கு பவுண்டரிகளை விளாசினார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை கடந்தது. இதனால் ஆஸி. கேப்டன் கம்மின்ஸ், சுழற்பந்துவீச்சாளரான லயனை அட்டாக்கில் கொண்டு வந்தார். களத்தில் இருந்த இருவருமே சுழற்பந்துவீச்சை சிறப்பாக ஆடுவார்கள் என்பதால், ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் லயன் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா ஸ்டீப் ஷாட் ஆட முயன்று 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஓவல் மைதானமே மயான அமைதிக்கு சென்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த ஓவரை வீசிய கம்மின்ஸ் பந்துவீச்சில் மீண்டும் ஒரு தேவையில்லாத ஷாட்டை ஆடி புஜாரா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் இரு முக்கிய பேட்ஸ்மேன்களும் தேவையில்லாத ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்து ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணி 93 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.