மும்பை: விஜய் ஹஸாரே டிராபி 2025-26க்கான மும்பை அணியில் ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. சர்வதேச வீரர்கள் குறைந்தபட்சம் இரண்டு லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கட்டாயப்படுத்தியுள்ளது.
பெரும்பாலான வீரர்கள் தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கும், அடுத்த மாதம் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கும் இடைப்பட்ட காலத்தில் அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மற்ற கிரிக்கெட் வடிவங்களில் ஓய்வு பெற்ற ரோஹித், 2027 ஆப்ரிக்க உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கப் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

விஜய் ஹஸாரே டிராபியில் முடிந்தவரை பல போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், ஆரம்ப ஆட்டங்களில் அவர் களமிறங்கவில்லை.இதுகுறித்து மும்பை அணி தேர்வுக்குழு தலைவர் பாட்டீல் கூறுகையில், "இந்த இந்திய வீரர்கள் எப்போது தயாராக இருக்கிறார்களோ, அப்போது மும்பை அணியில் சேர்க்கப்படுவார்கள். கிடைக்கப்பெறாதவர்களை அணியில் சேர்ப்பது இளம் வீரரின் வாய்ப்பைப் பறிப்பதற்குச் சமம்" என்றார். வெள்ளிக்கிழமை அணித் தேர்வு முடிந்ததும் அவர் இதைத் தெரிவித்தார்.
மறுபுறம், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சையத் முஷ்டாக் அலி டிராபியின் கடைசிப் போட்டிக்குப் பின் புனேவில் கடுமையான குடல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "மருத்துவக் குழுவின் அனுமதி கிடைத்தவுடன் அவர் மும்பை அணியில் சேர்க்கப்படுவார்" என பாட்டீல் உறுதிப்படுத்தினார்.
மூத்த பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே, தொடைத்தசைப் பிரச்சனை காரணமாக அணியில் இல்லை. "அவர் ஓய்வெடுத்து குணமடைவார். முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு மும்பை அணியில் இணைவார்" என்று பாட்டீல் விளக்கினார்.
மும்பையால் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அரையிறுதிக்குக்கூட முன்னேற முடியாவிட்டாலும், தேர்வுக் குழுத் தலைவர் பாட்டீல் திருப்தியை வெளிப்படுத்தினார். "பத்துப் போட்டிகளில் எட்டில் வென்றோம். நல்ல கிரிக்கெட் ஆடினோம். சர்பராஸ் கான் உட்பட அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். நிகர ரன் ரேட் விதிதான் எங்களைப் பாதித்தது" என்று அவர் கூறினார்.