மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 உலக கோப்பையையும் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையையும் இந்தியா வென்று அசத்தியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகப்பெரிய ஒரு உச்சத்தை தொட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த உச்சத்திற்கு பிறகு அடுத்தடுத்து உச்சங்களையும் இந்திய அணி தொடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது.

இதன் மூலம் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணி பல்வேறு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. இது கம்பீருக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஐசிசி t20 உலக கோப்பையை வென்ற பிறகு பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி வருவது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ரோகித் சர்மா டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இதுவரை 11 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் மூன்று முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார். இதில் இரண்டு முறை இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆகும். அது மட்டுமல்லாமல் ஐந்து முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்திருக்கிறார்.
டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மாவின் சராசரி 25.3 என்ற மோசமான நிலையில் இருக்கிறது. ரோகித் சர்மா ஒரு பக்கம் என்றால் விராட் கோலியும் இதேபோல் மோசமான ஒரு ஆட்டத்தை தான் வெளிப்படுத்துகிறார். விராட் கோலி t20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்ததற்கு பிறகு 11 இன்னிங்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்த 11 இன்னிங்ஸில் அவர் ஒரு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மூன்று முறை அவர் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார்.இவருடைய சராசரியும் ரோகித் சர்மாவை போலவே 25.3 என்ற அளவில் தான் இருக்கின்றது. இந்திய அணி கடந்த சில மாதங்களாக தோல்வியை தழுவுவதற்கு இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடாததே காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.
இதனால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களுடைய கிரிக்கெட்டின் இறுதி கட்டத்தை எட்டி விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரோகித் சர்மாவும், விராட் கோலியும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாமல் இருப்பது இந்த சரிவுக்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.