மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியதை அடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
உலகக் கோப்பையை வென்றதால் கௌரவமாக டி20 போட்டிகளில் இருந்து மூன்று கிரிக்கெட் வீரர்களும் விலகி இருக்கிறார்கள். இந்த நிலையில் இளம் வீரர்கள் இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அளவு இடம் பெறப் போகிறார்கள் .

இது ஒரு நல்ல முடிவாக இருக்கும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் எப்போது விடைபெறப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை ரோகித் ,விராட் கோலி ஆகியோர் தவறவிட்ட நிலையில் இனி அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
அதற்குள் ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகி விடும்.விராட் கோலிக்கு 38 வயதாகிவிடும். இதனால் இருவரும் இந்த தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த சூழலில் தான் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அதற்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது.
இந்த தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் பங்கு பெறுவார்கள் என ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில், அதுதான் இந்த மூன்று வீரர்களுக்கும் கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டி தொடராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா என இருவருக்குமே வயதாகி விட்டதால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிவெடுத்திருக்கிறார்கள்.
டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருப்பதால் சச்சின் டெண்டுல்கர் எவ்வாறு கடைசி வரை டெஸ்ட் போட்டி மட்டும் விளையாடினாரோ அதேபோல் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் ஒரு நாள் போட்டியிலிருந்து விலக உள்ளனர்.
டி20 உலக கோப்பையை வென்றது போல் ஐசிசி சாம்பியன்ஸ் தொடரையும் வென்று கௌரவமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் தற்போது குறைந்து வருகிறது. இந்த ஏழு மாதத்தில் இந்தியா வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.