மும்பை : பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா பொறுப்பற்ற முறையில் விளையாடி வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ஐந்து இன்னிங்சில் விளையாடி மொத்தமாகவே 31 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதனால் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இரு வீரர்களும் எப்போது ஓய்வு பெறுவார்கள் என்பது தொடர்பாக பேட்டி அளித்திருக்கிறார். இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார் என நம்புகிறேன்.
அவர் எப்படி ஆட்டம் இழக்கிறார் என்பதை எல்லாம் மறந்து விடுங்கள். என்னை கேட்டால் நிச்சயம் விராட் கோலி மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட கூடும். ஆனால் ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் முன்வரிசை வீரராக இருந்து விட்டு சரியாக விளையாடுவதில்லை.
பேட்டிங் செய்யும்போது கால்களையும் அவர் சரியாக நகர்த்துவதில்லை. பந்தையும் தாமதமாக அடிக்கின்றார். எனவே இந்த தொடருக்குப் பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெற கூடும். ஆஸ்திரேலியா அணி பொறுத்த வரை இந்த தொடரில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள்.
அவர்களுடைய குறிக்கோள் அவர்கள் விளையாடும் விதத்தைப் பார்த்தாலே தெரிகிறது. ஆஸ்திரேலியா அணி எஞ்சிய போட்டியிலும் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்தத் தொடருக்கு பிறகு இந்திய அணி இனி ஜூன் மாதத்தில் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்தியாவின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெறுவார்கள் என்பதை தற்போது ரசிகர்கள் மத்தியில் உள்ள கேள்வியாக இருக்கிறது.