சிட்னி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தனர். அவர்களுக்கு பிசிசிஐ சார்பில் எந்தவிதமான பாராட்டு விழாவும் நடத்தப்படவில்லை. ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி வரும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பை முடிவில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தனர். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றனர். இனி அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள்.

2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முடிவில் அவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தங்கள் நாட்டுக்கு ஒருநாள் தொடரில் விளையாட வரும்போது வழியனுப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதுவே ஆஸ்திரேலியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கடைசி தொடராக இருக்கும்.
ஏனெனில், 2026 ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் எந்த ஒருநாள் தொடரிலும் விளையாடப் போவதில்லை. அடுத்து 2027 ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே ஒருநாள் போட்டி உலகக் கோப்பை நடைபெறும். எனவே, ஆஸ்திரேலியா மண்ணில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடும் கடைசி சர்வதேச தொடராக இந்த ஒருநாள் தொடர் அமையும். இதை சிறப்பாகக் கொண்டாட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் வழியனுப்பு விழா நடத்த திட்டமிடப்பட வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் கூறி இருக்கிறார். எனினும், இந்த திட்டம் இப்போது ஆலோசனை அளவில் மட்டுமே உள்ளது. வரும் நாட்களில் இது முழு வடிவம் பெறுமா என தெரிய வரும்.
இந்தியாவில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இன்னும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கான பாராட்டு விழா நடத்தப்படாத நிலையில், அடுத்து ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா மண்ணில் கடைசி போட்டி விளையாடுவதற்காக வழியனுப்பு விழா நடத்த இருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியிருப்பது அந்த இரண்டு ஜாம்பவான்களின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பிசிசிஐ ஏன் இதுவரை அவர்களை கௌரவிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.