மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி கடுமையாக தடுமாறி வருகிறது. குறிப்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சொதப்பி வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடியுள்ள கேப்டன் ரோகித் சர்மா மொத்தமாகவே 31 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
விராட் கோலி,பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் மோசமாக விளையாடி வருகிறார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இல்லை என்றால் ரஞ்சி போட்டிகளில் களமிறங்கி தங்களுடைய பார்மை இருவரும் நிரூபிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் பார்டர் கவாஸ்கர் தொடர் வரும் ஜனவரி 7ஆம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சென்று விடும்.சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் டி20 போட்டியில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும் ஒரு நாள் போட்டியில் இவ்விருவரும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஒரு பயிற்சியாக இந்த தொடர் அமையும் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு வழங்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சரியாக விளையாடவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த ஓய்வு தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதே போன்று பும்ராவுக்கு இங்கிலாந்து எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்படுகிறது. பும்ராவுக்கு வழங்கப்படும் ஓய்வு மட்டும்தான் சரியானது ஆகும் என்று கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோர் கண்டிப்பாக ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.
ஜனவரி 7ஆம் தேதி டெஸ்ட் தொட்ர் முடிவடையும் நிலையில் ஒருநாள் தொடர் பிப்ரவரி 6ஆம் தேதி தான் தொடங்குகிறது என்பதால் இடையில் ஒரு மாதம் வரை ஓய்வு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணியில் இவ்விருவரும் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள ரஞ்சி கோப்பையின் இரண்டாவது பகுதியில் இந்த இரண்டு வீரர்களும் விளையாட வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்களும் வலியுறுத்தியுள்ளனர்.