சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது அபாரமான ஆட்டத்தின் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப்பால், உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்தச் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெறவுள்ள 2027 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் பங்கேற்பார்களா என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கடந்த ஓராண்டாக இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் அந்த வடிவங்களிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனால், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 2027 உலகக் கோப்பையை மனதில் கொண்டு, அனுபவமும் இளமையும் கலந்த ஒரு சமநிலையான அணியை உருவாக்கும் முயற்சியில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான சுனில் கவாஸ்கர், ரோஹித் மற்றும் கோலியின் உலகக் கோப்பை பங்கேற்பு குறித்து தனது தீர்க்கமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "இந்த ஆஸ்திரேலிய தொடருக்கு அவர்கள் இருவரும் விளையாட சம்மதம் தெரிவித்த நேரத்திலேயே, 2027 உலகக் கோப்பையில் விளையாட அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. இனி வரும் காலங்களில் அவர்கள் ரன் குவித்தாலும், குவிக்காவிட்டாலும், அவர்களது அனுபவமும் திறமையும் கருதி, அவர்கள் உலகக் கோப்பைக்குத் தயாராக இருந்தால், நிச்சயம் அணியில் இடம் பெறுவார்கள்" என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா நிதானமாக ஆடி தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி, 125 பந்துகளில் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 'டக் அவுட்' ஆகி பெரும் விமர்சனங்களைச் சந்தித்த விராட் கோலி, இந்தப் போட்டியில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் மேலும் கூறுகையில், "அவர்களுடைய இந்த ஆட்டத்தைப் பார்த்தால், 2027-ல் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான அணியில் அவர்கள் பெயரை எழுதிவிடலாம்" என்று பாராட்டி பேசினார்.
கோலி உடனான தனது பார்ட்னர்ஷிப் குறித்து சிட்னி ஒருநாள் போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா, "இது ஒரு அருமையான பார்ட்னர்ஷிப். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் கண்ணோட்டத்தில் இது மிகவும் அவசியமான ஒன்று" என்றார்.
"சுப்மன் கில்லின் விக்கெட்டை நாங்கள் சற்று முன்னதாகவே இழந்தோம். ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆட முடியாத நிலை இருந்ததால், மற்ற பேட்ஸ்மேன்களுக்குக் கூடுதல் பொறுப்பு இருந்தது. அந்தச் சூழலில் நாங்கள் இருவரும் களத்தில் நின்று பேசியபடியே ஆடிய ஒவ்வொரு நொடியையும் ரசித்தோம். இது ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூத்த வீரர்களின் இந்த எழுச்சி, இந்திய அணிக்கு பெரும் பலத்தைக் கொடுத்துள்ளதோடு, 2027 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வு குறித்த விவாதங்களை ரசிகர்களிடையேயும், முன்னாள் வீரர்கள் மத்தியிலும் தீவிரப்படுத்தியுள்ளது.