9 மணி... 9 நிமிடங்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த நெருக்கடி நேரத்தில் சிறப்பாக பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் நேற்றிரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் வீடுகளில் விளக்குகளை அமர்த்தி, வாசலில் விளக்கேற்ற பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.
பட்டாசுகள் கொளுத்தி ஆரவாரம்
பிரதமரின் இந்த அறைகூவலுக்கு செவிசாய்த்த மக்கள், இதேபோல தங்களது வீடுகளின் வாசல்களில் விளக்குகளை ஏற்றினர். சிலர் ஒருபடி மேலே போய், வீடுகளை விட்டு வெளியில் வந்து பட்டாசுகளை கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற ஊரடங்கு இருந்த நிலையில், ஒருசிலரின் இந்தக் கொண்டாட்டங்கள் நாடுமுழுவதும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளது.
|
இப்பவே கொண்டாடிடாதீங்க
பிரதமரின் கோரிக்கையை ஏற்று தன்னுடைய வீட்டு வாசலில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் விளக்குகளை ஏற்றினர். இந்நிலையில், உலக கோப்பை கொண்டாட்டத்திற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும், இப்போதே தெருவில் அனைத்து கொண்டாட்டங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் ரோகித் சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
|
சுகாதார பணியாளர்களுக்காக பிரார்த்தனை
இதனிடையே, சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்டியா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் தங்களது வீடுகளில் விளக்கேற்றி சுகாதார பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்தனர். நம்முடைய சுற்றுப்புறத்தையும் மருத்துவமனைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் சுகாதார பணியாளர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
|
அஸ்வின் கேள்வி
இதனிடையே, தன்னுடைய வீட்டு வாசலில் விளக்கேற்றிய ஆப் ஸ்பின்னர் ஆர் அஸ்வின், இதுகுறித்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்க்ததில் பகிர்ந்தார். மேலும் இந்த சந்தர்ப்பத்தில் தங்களுடைய வீட்டை விட்டு வெளியில் வந்து பட்டாசுகளை கொளுத்திய நபர்கள் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து பட்டாசுகள் கிடைத்தன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.