மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான ரோஹித் சர்மா இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 4301 ரன்கள் அடித்திருக்கிறார்
இதில் அதிகபட்சமாக 212 ரன்கள் அடங்கும். ரோகித் சர்மா இதுவரை 12 சதமும், 18 அரை சதமும் அடித்துள்ளார். ரோகித் சர்மா இந்திய அணிக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு விளையாடினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2013 ஆம் ஆண்டு தான் அறிமுகமானார்.

ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பி வந்தார். நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரும் ரோகித் சர்மா சோபிக்கவில்லை. இதன் காரணமாக இந்திய அணியிலிருந்து அவர் சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது.அப்போது இந்த தொடரில் ரோகித் சர்மாவை கேப்டன் பதவி விட்டு நீக்க தேர்வு குழு முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அஜித் அகார்கரும், பயிற்சியாளர் கம்பீரும் ரோகித் சர்மாவிடம் பேசி இருக்கிறார்கள்.
டெஸ்ட் அணியில் சாதாரண வீரராக இடம்பெறும் படி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் கேப்டன் பதவி விட்டு நீக்கியதால் ரோஹித் சர்மா இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று முடிவை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ரோகித் சர்மா விலகி இருக்கின்றார்.
இதனால் ரோகித் சர்மா வெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.