மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதில் தோனி குறித்து அவர் ஒரு வார்த்தை கூட சொல்லாத நிலையிலும், தோனிக்கு அர்ப்பணித்த இந்த ஓய்வு அறிக்கையை அவர் வெளியிட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரோகித் சர்மா 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்த கேப்டனாக இருந்தார். ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை அவர் மிகவும் சிறப்பாக வழி நடத்தியிருந்தார். 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியை வெற்றிக்கு வழி நடத்தியிருந்தார்.

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது தலைமையில் இந்திய அணி படுதோல்வியை அடைந்தது. மேலும் ரோகித் சர்மாவுக்கு 38 வயதாகும் நிலையில், இனியும் அவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைப்பது சரியில்லை என்ற முடிவை எடுத்தது பிசிசிஐ. அதைத் தொடர்ந்து ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தனது பதிவில், "நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது நாட்டுக்காக வெள்ளை நிற உடை அணிந்து கிரிக்கெட் விளையாடியதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். இத்தனை ஆண்டுகளில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பு மற்றும் ஆதரவுக்கு மிகவும் நன்றி. இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் நான் தொடர்ந்து விளையாடுவேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்த இடத்தில் எங்கேயும் தோனி பற்றி அவர் பேசாத நிலையில், இன்ஸ்டாகிராமில் சரியாக 7:29 மணிக்கு தனது ஓய்வு குறித்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதைத்தான் தோனி ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை தோனி சரியாக 7:29 மணிக்குத்தான் அறிவித்திருந்தார்.
2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியுடன் இந்திய அணி வெளியேறியது. அடுத்து தோனி அதன்பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் ஓய்வு குறித்து அப்போது எதுவும் அறிவிக்கவில்லை. அதன் பிறகு ஆகஸ்ட் 15, 2020 ஆம் ஆண்டு தோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டி ஓய்வை அறிவித்தார். சரியாக இரவு 7:29 மணிக்கு இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அவர் அறிவித்தார்.
தற்போது தோனியை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் அதே இன்ஸ்டாகிராமில் இரவு 7:29 மணிக்கு தனது டெஸ்ட் போட்டி ஓய்வை அறிவித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி, தோனி மீது இருக்கும் மரியாதையின் காரணமாகவே ரோகித் சர்மா அவரது ஓய்வு அறிவிப்பை பின்பற்றி இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா ரன் குவிக்கத் திணறி வந்தபோது, மிடில் ஆர்டரிலிருந்து துவக்க வீரராக அவரை மாற்றினார் அப்போது கேப்டனாக இருந்த தோனி. அந்த முடிவு ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வையே புரட்டிப் போட்டது. அதன் பிறகு ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக மாறினார்.
அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் அவருக்கு அதிக வாய்ப்புகளும் கிடைக்கத் துவங்கின. பின்னர் கேப்டனாகவும் மாறினார் ரோகித். தோனி அன்று எடுத்த அந்த ஒரு முடிவு தான் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே அவர் 7:29 மணிக்கு தனது டெஸ்ட் போட்டி ஓய்வை அறிவித்திருக்கிறார் என்ற பார்வை உள்ளது.