"சத்தம் இல்லேன்னா சுவாரஸ்யம் இருக்காது.. இவங்க பேசுவதை கண்டுக்க மாட்டேன்".. ரோஹித் சர்மா ஓபன் டாக்
லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பின்னர் பிசிசிஐ டிவிக்கு அளித்த நேர்காணலில் தனது ஓய்வுச் சர்ச்சை குறித்து பேசினார் ரோஹித் சர்மா.
"என்னுடைய வேலை பேட்டிங் செய்வது, நாட்டுக்காகவும் அணிக்காகவும் சிறப்பாக விளையாடுவது மட்டுமே. அறிமுகப் போட்டியில் விளையாடிய காலம் முதல் என் மீதான வதந்திகளும் விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் கிரிக்கெட் விளையாடும் வரை இந்தச் சத்தங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். சத்தம் இல்லை என்றால் அதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. மைதானத்திற்கு வெளியே பேசுவது அவர்கள் வேலை, மைதானத்திற்குள் விளையாடுவது என் வேலை. எனவே, இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை" என்று மிகவும் சாதுரியமாகப் பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 388 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ரோஹித், 110 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 138 ரன்கள் குவித்து அசத்தினார். 84 பந்துகளில் அவர் சதம் கடந்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் சதம் அடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற இரட்டைச் சாதனையை அவர் படைத்தார்.
இந்திய அணி இந்தப் போட்டியில் 360/7 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது குறித்துப் பேசிய ரோஹித், "தொடரை இழந்தது சற்று ஏமாற்றமளிக்கிறது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நாம் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும். இந்தத் தோல்விகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்" என்று பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.


Click it and Unblock the Notifications

