கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் ரோகித் சர்மா ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை நடு வரிசையில் ரோகித் சர்மா தொடங்கினார்.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோகித் சர்மாவை தொடக்க வீரராக தோனி களம் இறக்கினார். அது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து ரோகித் சர்மாவுக்கு ஏறுமுகமாக இருந்தது.

அது மட்டும் இல்லாமல் தொடக்க வீரராக களம் இறங்கி ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் ஃபோர் லீக் சுற்றில் ரோகித் சர்மா ஒரு சிக்சரை அடித்ததன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பு சச்சின், விராட் கோலி, டிராவிட், கங்குலி, தோனி ஆகியோர் இந்த ரெக்கார்டை படைத்திருந்த நிலையில் ஆறாவது இந்திய வீரராக ரோகித் சர்மா இந்த கிளப்பில் இணைந்தார். அது மட்டும் இல்லாமல் பத்தாயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்சில் பத்தாயிரம் ரன்களை கடந்த நிலையில் ரோகித் சர்மா அதை தற்போது 241 இன்னிங்சில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
விராட் கோலி 205 இன்னிங்ஸில் பத்தாயிரம் ரன்களைக் கடந்ததே தற்போது சாதனையாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 15 ஆவது வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டுக்குள் ரோகித் சர்மா தோனியின் ரன்களை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ரோகித் சர்மா முதல் 2000 ரன்களை எடுக்க 82 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்ட நிலையில் அடுத்த எட்டாயிரம் ரன்களை 159 இன்னிங்க்ஸில் ரோகித் சர்மா எட்டியிருக்கிறார்.