ரோகித் சர்மா வெறித்தனம்.. இங்கிலாந்து மண்ணில் மாபெரும் சாதனை! முதல் வெளிநாட்டு ஓப்பனர் என பெருமை
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, இங்கிலாந்து மண்ணில் 1500 ஒருநாள் போட்டி ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா படைத்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
இந்த வரலாற்று சாதனையை எட்டுவதற்கு ரோஹித் சர்மாவிற்கு 35 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. போட்டியின் போது சிறப்பாக விளையாடிய அவர், 32 பந்துகளில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்தார். 3 ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்த இலக்கை எதிர்நோக்கி விளையாடிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு பெரிய ஸ்கோர் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இங்கிலாந்து பவுலர்களும் ஸ்டம்பை குறிவைத்து நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசினர்.
இதனால், ரோகித், கில் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் ரோகித் சர்மா தனது அதிரடியை காட்டி ரன்களை குவித்தார். தனது வழக்கமான புல் ஷாட்டுகளை ஆடி தாம் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் என்பதை காட்டினார். இங்கிலாந்துக்கு எதிரான இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி, சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் கடைசிப் போட்டியாக அமையலாம் என்று பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால், இந்த வதந்திகளுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி ரோஹித் சர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்காது என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பிசிசிஐக்குள் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications

