கண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஆப்ரிடியை ரோகித் எப்படி சமாளிக்க போகிறார் என்ற சந்தேகம் எழுந்தது.
ரோகித் சர்மா போட்டியில் ஒரு 20 ஓவருக்கு மேல் நின்று விளையாடினால் மட்டுமே இந்தியாவுக்கு ரன் குவிக்க அதிக வாய்ப்பு இருக்கும். இதனால், ஷாகின் ஆப்ரிடியை எதிர்கொள்ள ரோகித் சர்மா ஒரு சூப்பர் பிளானை தீட்டி உள்ளார். அது ஒரு அளவுக்கு கை கொடுத்து இருக்கிறது.

ஷாகின் ஆப்ரிடி வலது கை பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும் போது, பந்தை உள்ளே கொண்டு வருவார். இதன் மூலம் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிக முறை எல்பிடபிள்யூ அல்லது போல்ட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும், காற்றில் பந்து அதிக நேரம் இருப்பது போல் ஷாகின் பந்துவீசுவார்.
இதனை சமாளிக்க வேண்டும் என்றால், பேட்ஸ்மேன் கடைசி வரை பந்தை பார்த்து, தாமதமாக ஷாட்டை விளையாட வேண்டும். இந்த நிலையில், எப்போதும் ஸ்டம்பை மறைத்து விளையாடும் பழக்கம் கொண்ட ரோகித், இன்று ஷாகின் ஆப்ரிடியை எதிர்கொள்ளும் போது, மூன்று ஸ்டம்பும் தெரியும் வகையில் நின்றார்.
மேலும் ஷாகின் ஆப்ரிடி பந்து வீசும் போது மெதுவாக நகர்ந்து வந்து, பின்பு பந்தை அதற்கு ஏற்றார் போல் அடிக்க முயன்றார். இதன் மூலம் எல்பிடபிள்யூ மற்றும் போல்ட் ஆகும் வாய்ப்பு குறைந்தது. மேலும், ஸ்டம்பை காட்டி கொண்டு பேட்ஸ்மேன் விளையாடும் போது, அது ஷாகின் ஆப்ரிடிக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். இது ரோகித் சர்மாவின் சிறந்த யுக்தியாக பார்க்கப்பட்டது. 4.2 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்த போது ஆட்டம் மழையால் தடைப்பட்டது.
இதனையடுத்து, மீண்டும் மழை தொடங்கியதும் ஷாகின் ஆப்ரிடி கடைசி பந்தை வீச ரோகித் சர்மா போல்ட் ஆனார். மழையால் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், அது ரோகித் சர்மாவின் கவனத்தை பாதிக்க செய்திருக்கும். இதனால் தான் ரோகித் சர்மா ஆட்டமிழந்திருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.