மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனக்குத்தானே அவமானத்தைத் தேடிக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு சம்பவம் சுட்டிக் காட்டப்படுகிறது. 2024-25 இல் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவிலேயே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கலாம்.
ஆனால், அப்போது கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து தாமாக விலகியதாகக் கூறிய ரோகித் சர்மா, அதன் பின்னர் கடும் கேலி கிண்டலைச் சந்தித்தார். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். பிசிசிஐ வாய்ப்பை மறுக்கும் அளவுக்கு ரோகித் சர்மா சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த மோசமான நிலையை அவரே தான் தேடிக் கொண்டிருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024-25ல் இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்தத் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா படுமோசமாக விளையாடியிருந்தார். ரன் குவிக்க முடியாமல் திணறியிருந்தார்.
இந்திய மண்ணிலேயே ரன் குவிக்க முடியாத அவர் ஆஸ்திரேலியாவில் எப்படி ரன் குவிப்பார் என்று கேள்வி அப்போதே இருந்தது. அப்போது அவரை இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலிருந்து ரோகித் சர்மா பங்கேற்றார்.
முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி அடுத்து ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய 3 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்தது. இதை அடுத்து, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தனது மோசமான ஃபார்ம் காரணமாக, ஐந்தாவது போட்டியிலிருந்து விலகுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.
ஒரு கேப்டன் எப்படி தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொள்ள முடியும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் அதைக் கேலி செய்தனர். ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இது பற்றி நெத்தியடியாகப் பேசியிருந்தார். "'ரோகித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மற்றொரு சுற்று துவங்க இருக்கிறது. இந்த நிலையில் அவர் இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் செயல்படுவது சந்தேகமே. எனவே அவர் விரைவாக தனது ஓய்வை அறிவிக்க வேண்டும். இனி அவர் இந்திய அணிக்காக விளையாட ,மாட்டார்" என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவேதான் இப்போது நடந்துள்ளது.
ரோகித் சர்மா சிட்னியில் ஓய்வு அறிவித்திருந்தால், அது அவருக்கும் கௌரவமாக அமைந்திருக்கும். ஒரு பேட்ஸ்மேன் தனது கடைசி காலத்தில் மோசமாகப் பேட்டிங் செய்வது சகஜமான விஷயம் தான். அப்போது தான் இறுதி கட்டத்தை எட்டி விட்டதை உணர்ந்து அவர் தாமாகவே ஓய்வு பெறுவதைக் கிரிக்கெட்டில் கௌரவமாகப் பார்க்க முடிகிறது.
உதாரணத்திற்கு ஆடம் கில்கிறிஸ்ட் ஒரு போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தபோது, எளிதான கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். அப்போதே தான் ஓய்வு பெறப்போவதாக அருகில் நின்ற மேத்யூ ஹேடனிடம் சொன்னார். பின்னர் அந்தப் போட்டியின் முடிவில் ஓய்வையும் அறிவித்தார். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், ரோகித் சர்மா தொடர்ந்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடி ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில், 38 வயதை எட்டிய நிலையில் ஓய்வு அறிவித்திருந்திருக்கலாம்.
ஆனால், வரும் ஜூன் மாதம் துவங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஆசைப்பட்டு, பிசிசிஐ-யைத் தொடர்புகொண்டிருக்கிறார் ரோகித். ஆனால். பிசிசிஐ நிர்வாகிகள் தாங்கள் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இரண்டு ஆண்டு காலத்துக்கு ஒரே கேப்டனை தான் நியமிக்கப் போவதாக உறுதியாக அறிவித்திருக்கிறார்கள்.
ரோகித் சர்மாவால் அடுத்த இரண்டு ஆண்டுகளும் முழுமையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் பிசிசிஐ இளம் வீரர்களை நோக்கி நகரத் துவங்கி விட்டது. தனக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த பிறகு ரோகித் சர்மா ஓய்வை அறிவித்திருக்கிறார்.