“கடைசிப் போட்டியை பார்க்க வாங்க”.. பெற்றோரை லண்டனுக்கு அழைத்த ரோஹித் சர்மா.. உருக்கமான தருணம்
லண்டன்: ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது கடைசி ஆட்டத்தை நேரில் காண அவரது பெற்றோர் லண்டன் சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 19 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி சர்வதேச போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோஹித், இந்த ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாக விடைபெறுகிறார் என கூறப்படுகிறது.

2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தத் தொடருக்குப் பிறகு ரோஹித் அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தகவல் தேர்வு குழுவினரால் அவரிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கடைசி சர்வதேச ஆட்டத்தை மைதானத்தில் இருந்து காணுமாறு தனது பெற்றோர் குருநாத் சர்மா மற்றும் பூர்ணிமா சர்மா ஆகியோரை லண்டனுக்கு ரோஹித் சர்மா அழைத்துள்ளார். அவர்கள் லார்ட்ஸ் மைதானத்தின் கேலரியில் அமர்ந்து போட்டியை நேரில் பார்ப்பதற்கும், தங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ரோஹித்தே முன்னின்று செய்துள்ளார்.
சமீபத்திய போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் அவர் 11 ரன்கள் மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும், அதிரடியாக ரன் குவிக்க முடியாமல், தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். தனது கடைசி போட்டியில் அவர் தனது பெற்றோர் முன்னிலையில் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடி கம்பீரமாக விடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பிசிசிஐ அதை நோக்கியே அவரை தள்ளி இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளைப் போன்றே ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
