மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி மும்பை போன்ற நகரங்களில் இனி பட்டாசு வெடிக்க போவதில்லை என பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதற்கு இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் பல்வேறு நகரங்களில் காற்றின் மாசு அளவு மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கிறது. இதனால் பல்வேறு நகரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது தீபாவளி சீசன் என்பதால் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. டெல்லியில் காற்றின் மாசு அளவு தொடர்ந்து ஐந்தாவது நாளாக 372 என்ற அளவில் இருக்கிறது. இது மிகவும் மோசம் என்ற அளவில் தரம் பிரிக்கப்பட்டு இருக்கிறது. மும்பையிலும் இதேபோன்று காற்றின் மாசு அளவு மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த நிலையில் பிசிசிஐ டெல்லி மற்றும் மும்பை மைதானங்களில் அணி வெற்றி பெற்ற பிறகு பட்டாசு வெடிக்காது என முடிவு எடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பட்டாசு வெடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, அனைவருக்கும் ஏற்ற உலகில் இது போன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ள நாம் யாருமே விரும்ப மாட்டோம். எனினும் இது குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த சூழலை தவிர்க்க ஏற்பாடு செய்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். நிச்சயமாக காற்றின் மாசு அளவு அனைவருக்கும் ஏற்றதாக இல்லை.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். நம் எதிர்கால தலைமுறைகளை பாருங்கள். உங்கள் குழந்தை, என் குழந்தை என அனைவருமே பயமின்றி வாழ வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். நான் கிரிக்கெட்டை தாண்டி பேசும்போதெல்லாம் நிச்சயமாக இதைப் பற்றி தான் அதிகம் பேசி இருக்கிறேன்.
நமது எதிர்கால சந்ததியர்களை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரோகித் சர்மா பட்டாசு வெடிக்கப்படுவதற்கு எதிராக பேசியிருக்கிறார். இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சுற்றுச்சூழல் நன்மைக்காக பிசிசிஐ இனி மும்பை மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் பட்டாசு வெடிக்கப்படாது. மக்களின் உடல் நலமும் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம் என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே மும்பையில் உள்ள காற்றின் மாசு குறித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.