மும்பை: ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்குவது தொடர்பான ஆலோசனை என்ற பெயரில், ஒரேயொரு தொலைபேசி உரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்று அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவும் கேப்டன்சியை விட்டுக் கொடுக்கும் முடிவில் இருந்ததாக கூறிய அவர், ஒரேயொரு நாளில் அப்படியான முடிவுக்கு பிசிசிஐ வந்திருக்கக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2027 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்திய அணியை தயார் செய்ய சுப்மன் கில்லுக்கு போதுமான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார். இந்த கேப்டன்சி மாற்றம் தொடர்பாக ரோகித் சர்மாவிடம் ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்பட்டதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரம் இந்திய அணி வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான அபிஷேக் நாயரின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற நோக்கில் ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி வந்தார். சுமார் 11 கிலோ வரை உடல் எடையை குறைத்து ரோகித் சர்மா மீண்டும் முழு ஃபிட்னஸ் உடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அபிஷேக் நாயர் பேசுகையில், ஒரேயொரு விஷயம் தான் எனக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனென்றால் ரோகித் சர்மாவிடம் பிசிசிஐ தேர்வுக் குழு பேச்சுவார்த்தை நடத்திய போது, இரு தரப்பும் ஒரே மனநிலையில் தான் இருந்தனர். நாம் எதிர் காலத்தை பற்றி சிந்திக்க தொடங்க வேண்டும்.
சுப்மன் கில்லுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கப்பட வேண்டியது அவசியம். அதேபோல் ரோகித் சர்மாவை இந்திய அணியில் தேர்வு செய்தது மிகச்சிறந்த விஷயம். ஏனென்றால் அவருக்கு ஒரு பொறுப்பு உள்ளது. இளம் கேப்டனை தயார் செய்யும் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கும் உள்ளது. ஆனால் எனக்கு பிரச்சனையாக இருப்பது ஒரு விஷயம் தான்.
ஏதாவது விஷயத்தை மாற்றப் போகிறோம் என்றால், சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் ரோகித் சர்மாவிடம் ஒரேயொரு தொலைபேசி உரையாடலில் அத்தனையும் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.