மும்பை : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு சென்றது. அது மட்டுமல்லாமல் ஆசிய கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, இறுதிப்போட்டி மற்றும் 2024 டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டம் ஆகியவற்றை வென்றது.
இதைப் போன்று இந்திய வங்கதேசம் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டதால் இந்த போட்டி டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதிரடியாக விளையாடி 285 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து வங்கதேசத்தை இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, 95 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி கடைசி இன்னிங்சில் வெற்றி பெற்றது. இது குறித்து பாராட்டியுள்ள முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான பரஞ்சப்பா, ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ரோகித் சர்மா கேப்டன் ஆன பிறகு இந்திய அணியின் டிஎன்ஏ மாறிவிட்டது. இந்தியா தற்போது அதிரடியாக விளையாடி வருகிறது. கேப்டனாக அவர் முன் நின்று அணியை வழி நடத்தி வருகிறார். 2023 50 உலகக் கோப்பை போட்டியில் நமது பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடினார்கள். ரோகித் சர்மாவே பலமுறை ரன் குவிப்பிற்கு காரணமாக இருந்தார்.
டி20 உலக கோப்பையிலும், கான்பூர் டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மா எவ்வாறு விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். இந்திய அணியின் டி என் ஏ இனி அதிரடிதான் என்பதில் ரோகித் சர்மா உறுதியாக இருக்கின்றார். ஆஸ்திரேலியா தொடரில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கு ஒரு ட்ரெய்லராக தான் வங்கதேசம் தொடரை நான் பார்க்கின்றேன். கான்பூர் டெஸ்ட் போட்டி நாம் இனி எவ்வாறு விளையாட போகிறோம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தி இருக்கிறது.
ரோகித் சர்மா முதல் அஸ்வின் வரை அனைவருமே தற்போது அதிரடியாக ஆடுகிறார்கள். தங்களுடைய உள்ளுணர்வை மதித்து விளையாடுகிறார்கள். இதே போல் ஒரு அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து இந்தியா விளையாடினால் நிச்சயம் எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும். இதுபோன்று பிரித்வி ஷா இந்தியாவின் மிகத் திறமை வாய்ந்த வீரராக இருக்கிறார். அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று பரஞ்சப்பா கூறியுள்ளார்.