மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் பிரித்விஷா தவறான பாதையை தேர்ந்தெடுத்ததால் தான் கிரிக்கெட்டில் தற்போது தடுமாறி வருவதாக ரோகித் சர்மாவின் இளம் வயது பயிற்சியாளரான தினேஷ் லாட் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் பள்ளி கிரிக்கெட் சாதனையை பிரித்விஷா உடைத்ததில் இருந்தே அவர் மீது இந்திய கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அதேபோல் தனது 17வது வயதில் ரஞ்சிக் கோப்பை அறிமுக போட்டியில் பிரித்விஷா சதம் அடித்தார். அதன் பிறகு நடைபெற்ற அண்டர் 19 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு தொடரையும் வென்றார்.

இதனால் அதே ஆண்டு அவருக்கு சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி ஷா சதம் அடித்தார். இப்படி கிரிக்கெட்டின் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்த அவர் திடீரென்று சரிவை சந்தித்து வந்தார்.
ஐபிஎல் தொடரில் பல கோடிகளை சம்பாதித்து வந்த பிரித்வி ஷாவை கடந்த ஐபிஎல் சீசனில் ஒரு அணி கூட வாங்கவில்லை. பல அணி வீரர்கள் காயம் அடைந்தும் மாற்று வீரராக கூட யாரும் பிரித்விஷாவை தேர்வு செய்ய விரும்பவில்லை. இந்த நிலையில் பிரித்விஷா குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மாவின் இளம் வயது பயிற்சியாளரான தினேஷ் லாட், எனக்கு பிரித்விஷாவை சிறுவயதிலிருந்தே தெரியும்.
அவருக்கு 10 வயது இருக்கும் போதிலிருந்து நான் பார்த்து வருகின்றேன். நான் பார்த்ததிலே மிகவும் திறமை வாய்ந்த வீரர் அவர். நான் ஏற்கனவே சொன்னது போல் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பயணம் இருக்கும். அவருடைய பயணத்தில் என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லை.
அவர் தவறான வழியில் தேர்ந்தெடுத்து தன்னுடைய கிரிக்கெட்டை கெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் இப்போதும் நான் சொல்வேன். பிரித்வி ஷா தான் மிகவும் திறமை வாய்ந்த வீரர். இந்திய அணியில் அவரை போல் ஒரு பேட்ஸ்மேன் டாப் ஆர்டரில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
அவர் பேட்டிங் செய்யும் விதம் உண்மையிலேயே வியக்கத்தக்கும் வகையில் இருக்கும். தற்போது சூரியவன்சி ஆயுஷ் மாத்ரே போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். நாம் நட்சத்திர வீரர்களை இளம் வயதில் இருந்து உருவாக்கி வருகின்றோம். அடுத்த கட்ட தலைமுறைக்கான வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இதனால் இந்திய கிரிக்கெட் எப்போதுமே உச்சத்தில் தான் இருக்கும் என்று தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.