துபாய்: இந்திய அணிக்காக 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லத் தனது முழு திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவேன் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரோகித், தனது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த முக்கிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகச்சிறந்த வெள்ளைப்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவரான 38 வயதான ரோகித் சர்மா, நாட்டுக்காக ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திய அவர், கோப்பையை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

முன்னதாக, 2015 மற்றும் 2019 உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியபோது, ரோகித் அந்த அணியின் முக்கிய வீரராக இருந்தார்.ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் நான்காவது அதிக ரன் குவித்த வீரரான ரோகித் சர்மா, வருகிற 2027 ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட விரும்புவதாகவும், இந்திய அணியில் இடம் பெற தனது முழு முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் ஒரு நிகழ்வில், "அடுத்த 18 மாதங்களுக்கு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை மீது உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கவனமாக இருக்குமா?" என்று ரோகித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம், நான் நிச்சயமாக அங்கு (தென் ஆப்பிரிக்கா) சென்று எனது நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன். அது நான் எப்போதும் எதிர்பார்த்த ஒன்று."
"இந்த 50 ஓவர் உலகக் கோப்பையைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அப்போது டி20 உலகக் கோப்பை இல்லை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இல்லை, ஐபிஎல்-ம் இல்லை. எனவே, நாங்கள் அனைவரும் 50 ஓவர் உலகக் கோப்பையைப் பார்த்துதான் வளர்ந்தோம், அதுதான் கிரிக்கெட்டின் உச்சகட்டம், இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். எனவே, ஒரு தீவிர ஆர்வம் இருந்தது. அந்த ஒரு கோப்பைக்காக நிறைய காத்திருந்தேன். ஆம், எனக்கும் அந்த கோப்பை மிகவும் வேண்டும். எனவே, அதை வெல்ல எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்." என்று பதில் அளித்தார்.
ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் மூன்றாவது அதிக ரன் குவித்த வீரரான ரோகித், 2023 உலகக் கோப்பையில் 597 ரன்கள் எடுத்தார். விராட் கோலி தலைமையிலான அணி விளையாடிய 2019 உலகக் கோப்பையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 648 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் ரோகித் திகழ்ந்தார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில், இந்திய அணிக்காக 14 ஒருநாள் போட்டிகளில் 650 ரன்கள் குவித்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தையும் நூறு சதவீத வெற்றிப் பதிவுடன் வென்று கொடுத்தார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித், அடுத்ததாக ஜூலை 2026 இல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.