தர்மசாலா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.
ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணியை கண்டாலே இந்திய அணி பதற்றம் ஆகிவிடும். சொல்லப்போனால் டி20 உலக கோப்பை ஒரு நாள் என அனைத்து கிரிக்கெட்டிலுமே நியூசிலாந்திடம் இந்தியா பல்வேறு தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

இந்த நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக தர்மசாலாவில் இன்றைய ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட் இழந்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்தார். இதேபோன்று விராட் கோலி 14 பந்துகளை எதிர் கொண்டு 95 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் இந்திய அணி 48 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்து அணியை ஐசிசி தொடர்களில் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்தார். இந்த 20 ஆண்டுகளில் தோனி ,விராட் கோலி ஆகியோர் கேப்டனாக இருந்தபோது நியூசிலாந்திடம் இந்தியா தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரோகித் சர்மாவின் காலத்தில் இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று ரோகித் சர்மா பல சாதனைகளை இன்றைய ஆட்டத்தில் படைத்திருக்கிறார். நான்கு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரே ஆண்டில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.
அதேபோன்று நடப்பாண்டில் 50 சிக்சர்கள் அடித்த முதல் வீரர், உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், நடப்பு உலககோப்பை தொடரில் 300 ரன்கள் எட்டிய முதல் வீரர் என்ற பல சாதனைகள் ரோகித் சர்மா இன்று படைத்திருக்கிறார். விராட் கோலி 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த உடன் ரசிகர்களின் கவனம் அங்கு சென்றுள்ள நிலையில் ரோகித் சர்மா மட்டும் இவ்வளவு சாதனைகளை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.