துபாய்: உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத இமாலய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ஐசிசி நடத்தும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அனைத்தின் இறுதிப் போட்டிகளுக்கும் தனது அணியை அழைத்துச் சென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரோஹித் சர்மா.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய நான்கு தொடர்களை நடத்தி வருகிறது. இந்த நான்கு தொடர்களின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணியை அழைத்துச் சென்று இருக்கிறார் ரோஹித் சர்மா.

இந்த சாதனையை உலகில் வேறு எந்த கேப்டனும் இதுவரை செய்தது இல்லை. மேலும், இந்த சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ஆண்டு இடைவெளியில் செய்து இருக்கிறார்.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி இருந்தது. அப்போதும் ரோஹித் சர்மாவே இந்திய அணியை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வழிநடத்தி சென்றிருந்தார். அதன் பின் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கும் ரோஹித் சர்மா இந்திய அணியை வழி நடத்திச் சென்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்ற இந்திய அணி வெற்றி பெறவில்லை. அதன் பின் 2024 டி20 உலகக் கோப்பைக்கும் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார் ரோஹித் சர்மா. அப்போது இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையை வென்றது.
அதைத் தொடர்ந்து தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணியை அழைத்து சென்று இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. டி20 உலகக் கோப்பை போலவே இந்த முறையும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்த போது, ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து கடுமையான விமர்சனம் எழுந்திருந்தது. ஆனால், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது கேப்டன்சி இன்னும் உச்சத்தில் தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இந்த சாதனை அமைந்துள்ளது.
அடுத்து இந்திய அணி மார்ச் 9 அன்று நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன. அதில் வெற்றி பெறும் அணி இந்திய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் மோதும்.