ஆஹா ரோகித் சர்மா மனிதனே கிடையாது.. தெய்வம்.. எப்படி ஒரு தாராள உதவி பாருங்க!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவும் கொரோனா நிவாரண நிதிக்கு மிக தாராளமாக உதவி செய்து பெருமை சேர்த்துள்ளார். கூடவே நாய்களுக்காகவும் அவர் நிதியளித்து சபாஷ் பெற்றுள்ளார். மொத்தமாக ரூ. 80 லட்சம் உதவியை அவர் செய்துள்ளார்.
Recommended Video
கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா போராடி வருகிறது. இதற்கு பெருமளவில் பணமும் தேவைப்படுகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று பல்துறையினரும் நிதியளித்து வருகின்றனர்.
கார்கில் போர் சமயத்தில்தான் மிகப் பெரிய அளவில் தேசம் நிதியுதவியில் இறங்கியது. அதன் பிறகு இப்போது இந்த கொரோனா போரிலும் வெல்ல நிதியுதவிகளை அளிக்க ஆரம்பித்துள்ளனர் மக்கள்.

குவியும் நிதி
பெரும் பெரும் தொழிலதிபர்கள், பல்துறையினர் நிதியுதவியை பிரதமருக்கும், மாநில அரசுகளுக்கும் அளித்து வருகின்றனர். பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியுதவியைக் கொடுத்து வருகின்றனர். கிரிக்கெட் உலகிலும் கூட பலர் தொடர்ந்து நிதியுதவி செய்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வாரியம் ரு. 51 கோடி நிதியுதவியை அளித்துள்ளது.

ரோகித் சர்மாவின் தாராளம்
அதேபோல வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரும் நிதியுதவியை அளித்துள்ளனர். விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரும் நிதியுதவியை அளித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது மும்பையைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவும் நிதியுதவி கொடுத்துள்ளார்.

ரோகித்தின் நல்ல மனசு
மிகப் பெரிய அளவில் நிதியுதவி செய்துள்ளார் ரோகித் சர்மா. அதாவது பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 45 லட்சம் அவர் நன்கொடையாக அளித்துள்ளார். அதேபோல, மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் அளித்துள்ளார். அது போக, @FeedingIndiaவுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளார். அதை விட முக்கியமாக, தெருவோர நாய்களின் நலனுக்காக ரூ. 5 லட்சம் கொடுத்து இதயத்தில் இடம் பிடித்து விட்டார் ரோகித் சர்மா.
நாய்கள் மீதும் பரிவு
கொரோனாவைரசால் மனிதர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் விலங்குகளால் இது பரவி விடும் என்று யாரோ தவறாக கிளப்பிய வதந்தியால் பலர் தாங்கள் வளர்த்து வந்த நாய்களையும், பூனைகளையும் விரட்டி விட்டதாக செய்திகள் வெளியாகின. இது போக ஏற்கனவே தெருவோர நாய்களும் கூட வழக்கமாக கிடைக்கும் சாப்பாடு கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின. இந்த நிலையில்தான் ரோகித் சர்மா நாய்களின் நலனுக்காகவும் மனம் இரங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications