மும்பை: இந்திய அணி விளையாடும் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும், 3 கேப்டன்களை நியமிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கு பின், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பேசுகையில், ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக ரோகித் சர்மாவிடம் ஆலோசிக்கப்பட்டது. அதனால் கேப்டன்சி மாற்றம் சுமூகமாக முடிந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது கடினமாக இருந்தது.
ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா வெல்லவில்லை என்றாலும், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு கடினமானது தான். ஏனென்றால் இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால் சில நேரங்களில் நாம் எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். இந்திய அணிக்கு எது சரியோ, அதனை செய்ய வேண்டும்.
இன்னும் 6 மாதத்திற்கு பின் இந்த முடிவு சரியானதாக கூட இருக்கலாம். அதேபோல் 2027 உலகக்கோப்பை மீது ஒரு பார்வையை வைக்க வேண்டும். அதற்காக திட்டமிட புதிய கேப்டனுக்கு போதுமான அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இந்திய அணி விளையாடி வரும் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும், 3 கேப்டன்களை நியமிப்பது நடைமுறைக்கு சரியாக இருக்காது.
அது கேப்டன்களுக்கு மட்டுமல்லாமல், பயிற்சியாளருக்கும் சிக்கலாக அமையும். அப்படி நடந்தால், ஒவ்வொரு கேப்டனுடனும் பயிற்சியாளர் அவர்களின் திட்டத்திற்கு பணியாற்ற வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே சுப்மன் கில்லுக்கு இந்திய அணியிலும், பிசிசிஐ நிர்வாகத்திலும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.