மும்பை: பிசிசிஐ சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான நமன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஆனால், இந்த விழாவை ஒளிபரப்பிய நிறுவனம் செய்த ஒரு மிகப்பெரிய தவறு, கேப்டன் ரோஹித் சர்மாவின் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. ஆனால், இந்த விருது விழாவில் சுப்மன் கில்லை 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த கேப்டன் என்று ஒளிபரப்பாளர்கள் தவறுதலாக திரையில் காட்டினர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, உண்மையான கேப்டன் ரோஹித் சர்மா தானே என ரசிகர்கள் சரமாரியாக கேள்வியெழுப்பி ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக சுப்மன் கில் கேப்டனாக எந்த பெரிய தொடரையும் வென்று கொடுக்கவில்லை என தனிப்பட்ட முறையில் சுப்மன் கில்லை விமர்சனம் செய்தனர். தற்போது ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். எனினும், கடந்த ஆண்டு அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு சுப்மன் கில் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதுவும் ரோஹித் ரசிகர்களின் கோபத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில், 2024 - 2025 சீசனுக்கான சிறந்த சர்வதேச ஆடவர் கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டு பாலி உம்ரிகர் விருதை வென்றார். அவர் இந்த விருதை வெல்வது இது 2 ஆவது முறையாகும். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டிலும் அவர் இந்த விருதை பெற்றிருந்தார். அதேபோல், சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை ஸ்மிருதி மந்தனா 5 ஆவது முறையாக தட்டிச் சென்றார்.

மேலும், இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக முன்னாள் ஜாம்பவான்களான ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோருக்கு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை, 2025 அண்டர் 19 மகளிர் உலகக்கோப்பை, 2026 ஆடவர் அண்டர் 19 உலகக்கோப்பை மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என 5 கோப்பைகளை வென்ற இந்திய அணிகளும் இந்த விழாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
