மும்பை : ஆசிய கோப்பை இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் அதிரடியாக இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஒருநாள் போட்டி நிபுணர் மற்றும் ரன் மெஷின் என அழைக்கப்படும் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனக்கு வாய்ப்பளிக்காமல் போனதால் வருத்தத்தில் இருந்த ரோஹித் சர்மாவுக்கு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், இந்த கேப்டன் வாய்ப்பு முக்கியமானதாகும்.

இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர், ரோஹித் சர்மாவிடம் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்படுவததில் என்ன வித்தியாசம் என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ரோஹித் சர்மா, "ஒன்றில் உங்கள் அணி வீரர்கள் உங்களுடன் ஆண்டு முழுவதும் பயணிப்பார்கள். மற்றொன்றில், நீங்கள் எதிராக ஆடிய வீரர்களும், நீங்கள் இதுவரை பார்த்திராத வீரர்களும் இருப்பார்கள்" என பதில் அளித்துள்ளார்.
ரோஹித் சர்மா கடந்த சில சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதை வைத்தே இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு வேடிக்கையான இந்த பதிலை அளித்துள்ளார் ரோஹித்.
ஆசிய கோப்பையில் ரோஹித் சமாளிப்பாரா? அல்லது சறுக்குவாரா? என்ற கேள்விகளோடு இன்னும் இரண்டு வாரங்களில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது இந்தியா.