மும்பை: தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டுக்கு அதிக ஐசிசி கோப்பையை வென்று தந்தவர் என்றால், அது கேப்டனாக இருந்த ரோகித் சர்மா தான். 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாகவே கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதன் மூலம் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவடைந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இந்த நிலையில் ஒரு நாள் அணியில் இருந்தும் இருவரும் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக ரோகித் சர்மா பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நான் அணியை எப்போதுமே விரும்புகிறேன்.
என் வீரர்களுடன் விளையாடுவதை நான் நேசிக்கின்றேன். இந்தப் பயணம் தான் என்னை இவ்வளவு நாளாக ஓட வைத்தது. இது ஏதோ ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான பணி கிடையாது. இது அனைவரும் இணைந்து பல ஆண்டுகளாக செய்ய வேண்டிய பணி. நாங்கள் பலமுறை கோப்பையை வெல்ல அருகே வருவோம்.
ஆனால் எங்களால் இறுதிக் கட்டத்தை தாண்டி கோப்பையை கை வைக்க முடியாது. அப்போதுதான் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எதிலும் வித்தியாசமாக செயல்பட வேண்டும் என்று நினைத்தோம். இதை இரண்டு வகையில் பார்க்கலாம். ஒன்று ஒரு விஷயத்தை செய்து ஆக வேண்டும் என்பதைவிட அதை செய்து முடித்துவிட்டு சாதிக்க வேண்டும் என்பதுதான்.
ஒரு கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் முடியாது. அணியில் இருக்கும் 11 வீரர்களும் நாம் நிச்சயமாக கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை பெற வேண்டும். அது எங்கள் அணி வீரர்கள் பலரும் செய்திருக்கிறார்கள். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் போட்டியில் வெல்ல நாங்கள் கடுமையாக முயற்சிப்போம். ஒவ்வொரு போட்டியிலும் எப்படி வெல்ல வேண்டும். சவால்களை எப்படி சந்திக்க வேண்டும்.
களத்தில் அஜாக்கிரதையாக இல்லாமல் அனைத்து விஷயத்தையும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். இது போன்ற தகுதிகளால் தான் எங்களால் கோப்பையை வெல்ல முடிந்தது. இந்த பயணத்தை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு போட்டியும் முடிந்த பிறகு அதனை அப்படியே தூக்கி வைத்து விட்டு அடுத்த போட்டியில் கவனம் செலுத்த தொடங்கினோம். நிச்சயம் அணி நன்றாக இருந்ததால் தான் என்னால் கோப்பையில் வெல்ல முடிந்தது.
நானும் பயிற்சியாளர் ராகுல் டிராவட்டும் இணைந்து டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி விளையாடி வந்தோம். 2023 உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம் என ரோகித் சர்மா கூறியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது பயிற்சியாளராக கம்பீர் தான் இருந்தார். ஆனால் தற்போது கம்பிருக்கும் ரோகித் சர்மாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதன் காரணமாக ராகுல் டிராவிட்டுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ரோகித் சர்மா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.