ஜெய்ப்பூர்: இந்திய கிரிக்கெட்டின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா, சர்வதேசப் போட்டிகளுக்கு இணையாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் களமிறங்குவது அரிதான ஒன்று. ஆனால், விஜய் ஹசாரே டிராபி தொடரில் இன்று (டிசம்பர் 26) மும்பை மற்றும் உத்தரகண்ட் அணிகள் மோதும் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்ற அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், ஜெய்ப்பூரே ஸ்தம்பித்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள். ஆனால், இறுதியில் மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் மட்டும்தான்.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு, நேற்று இரவிலிருந்தே தொடங்கிவிட்டது. ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை நேரில் காண வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் விடியற்காலையிலேயே மைதானத்தை முற்றுகையிட்டனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் டிக்கெட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ரசிகர்களின் இந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் (RCA) அவசரமாக இரண்டு கூடுதல் ஸ்டாண்டுகளைத் திறந்துவிட்டது.
இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், டெல்லியில் நடைபெறும் போட்டியில் விராட் கோலியும், ஜெய்ப்பூரில் ரோஹித் சர்மாவும் ஒரே நேரத்தில் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. "டெல்லியில் கோலி, ஜெய்ப்பூரில் ரோஹித்... இன்றைக்கு சும்மா அதிரப்போகுது சோஷியல் மீடியா" என ரசிகர்கள் மீம்ஸ்களைத் தயார் செய்து வைத்துவிட்டு காத்திருந்தனர். மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு அணிகளுமே அந்தந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யவிருந்ததால் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற உத்தரகண்ட் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். "பரவாயில்லை, மும்பை அணிக்காக களமிறங்கப் போகும் ரோஹித் பேட்டிங் செய்வதை உடனே பார்க்கலாம்" என ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, பேடை கட்டிக்கொண்டு ஸ்டிரைக் எண்டிற்கு வந்தார். முதல் ஓவரை உத்தரகண்ட் அணியின் தேவேந்திர சிங் போரா வீசினார். தேவேந்திர சிங் போரா வீசிய முதல் பந்தில், ஜக்மோகன் நாகர்கோட்டியிடம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்' முறையில் ஆட்டமிழந்தார் ரோஹித்.
மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்களுக்கும் என்ன நடந்தது என்றே புரியவில்லை. முதல் பந்திலேயே விக்கெட் விழுந்ததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. ஆரவாரத்துடன் இருந்த சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஒரு நொடியில் மயான அமைதிக்குச் சென்றது. ரோஹித் ஒரு நிமிடம் கூட பேட்டிங் செய்யவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறத் துவங்கினர்.
"இதைப் பார்க்கவா இவ்வளவு கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கினோம்?", "காலையில இருந்து காத்துக்கிட்டு இருந்தது வீணா போச்சே!" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
ரோஹித் சர்மாவின் இந்தத் திடீர் வெளியேற்றம் மும்பை அணிக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தது. முதல் பந்திலேயே 0-1 என விக்கெட்டை இழந்த நிலையில், அங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் இளம் வீரர் முஷீர் கான் ஆகியோர் அணியை மீட்டெடுக்கப் போராடினர். 5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடியது.