மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சென்றிருக்கும் சுற்றுலா தலம் எங்கிருக்கிறது என்று தெரியாமல் ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பார்டர் - கவாஸ்கர் டிராபி, ஐபிஎல் கிரிக்கெட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்று இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து விளையாடி வந்தனர். ஐபிஎல் தொடர் மீண்டும் ஹோம், அவே மைதானங்களில் நடைபெற்றதால், தொடர்ந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு பயணமும் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படவில்லை.

இதனால் இந்திய அணியின் சுற்றுப்பயணத்தை மட்டும் முடிவு செய்த பிசிசிஐ, இந்திய அணி பங்கேற்க உள்ள தொடர்களுக்கான அட்டவணையை வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை மட்டும் வெளியிட்ட பிசிசிஐ, இந்திய வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு வழங்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜூலை முதல் வாரத்தில் இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன்பாக குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வரும் இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதில் கேப்டன் ரோகித் சர்மா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் இந்தியா திரும்பவில்லை.
அவர் தனது மனைவி ரித்திகா, மகள் சமைரா உடன் லண்டனில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஜாலியாக விசிட் அடித்து வருகிறார். குறிப்பாக மகளை ஏராளமான தீம் பார்க்-களுக்கு கூட்டிச்சென்று விளையாடி வருகிறார். இதன் புகைப்படங்கள் மனைவி ரித்திகா இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒவ்வொரு நாளும் பதிவிட்டு வருகிறார்.
இன்னொரு பக்கம் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷா, மகன் அகஸ்தியாவுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள மிருக காட்சி சாலையில் ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டுள்ளார். இதனை அவரின் மனைவி நடாஷா, யானை ஒன்றின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.