சின்னப்புள்ளத்தனமா அம்பயரிடம் சண்டை போட்ட ரோகித் ஷர்மா.. ஆப்பு வைத்த ஐபிஎல் நிர்வாகம்
மும்பை: வைடு பந்து என அறிவிக்க வேண்டும் என்று நடுவரிடம் போய் தகராறு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் மோதின. அப்போது கடைசி ஓவருக்கு 17 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், ஜெயதேவ் உனடாகட் வீசிய முதல் பந்தில் விக்கெட் வீழ்ந்த நிலையில், 2வது பந்தை மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா சந்தித்தார்.
ஸ்லோவாக வீசப்பட்ட அந்த பந்தை ஸ்டம்புக்கு குறுக்காக மறித்தபடி நின்று, சிக்சராக விளாசினார் ரோகித் ஷர்மா. மூன்றாவது பந்தை ஜெயதேவ் வீச வந்தபோதும், ஸ்டம்புக்கு குறுக்காக நடந்து வந்தார் ரோகித் ஷர்மா.

ஆப்சைடில் போன பந்து
இதனால் பந்தை இன்னும் அதிகமாக ஆப்சைடில் வீசினார் ஜெயதேவ். அது வைடாக வருவதை பார்த்த ரோகித் ஷர்மா, பந்தை தொடாமல் அப்படியே விக்கெட் கீப்பருக்கு விட்டுவிட்டார். அதில் ஒரு ரன் கிடைக்கும், ஒரு பந்தையும் மிச்சப்படுத்தியாகிவிட்டது என ரோகித் ஷர்மா கணக்குப்போட்டார்.

நடுவருடன் வாக்குவாதம்
ஆனால் அந்த பந்தை வைடு என அறிவிக்கவில்லை கள நடுவர் எஸ்.ரவி. இதனால் ரோகித் ஷர்மா கடும் அப்செட்டானார். ஒரு பந்து வீணாகிவிட்டதே என பொங்கியவ அவர், அப்படியே நடந்து நடுவரிடமே வந்து, "இது வைடு இல்லையா.." என கேட்டு வாக்குவாதம் செய்தார். லெக் அம்பயரும் ஓடி வந்து ரோகித் ஷர்மாவை திரும்பி போகுமாறு அறிவுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்த பந்திலேயே அவுட்
இதையடுத்து கோபத்தோடு அடுத்த, பந்தை சந்தித்த ரோகித் ஷர்மா, ஸ்லோ பந்தை பலம் பொருந்திய அளவுக்கு அடிக்கப்போய், அது மிக உயரமாக பவுலரின் தலைக்கு மேலே போய் அவராலேயே கேட்ச் செய்யப்பட்டது. இந்த போட்டியில் மும்பை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. வைடு பந்து ஒரு முக்கியமான காரணமாக மும்பை ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.

வைடுதான்
இந்த நிலையில் நடுவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதால் ரோகித் ஷர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிமுறைப்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிவி ரிப்ளேயில் அந்த பந்து ஒரு வைடு பந்துதான் என்பது அனைவருக்குமே தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications