“ரோஹித் அவர் மனசு போல ஆடட்டும்.. பிரஷர் வேண்டாம்”.. ஆதரவு அளித்த கம்பீர்.. பிசிசிஐ சொன்ன தகவல்
கார்டிஃப்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூத்த வீரர் ரோஹித் சர்மாவுக்கு, எவ்வித அழுத்தமும் இன்றி அவரது இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாட தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முழு சுதந்திரம் அளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
சமீப காலமாக ரோஹித் சர்மாவின் வயது மற்றும் எதிர்காலம் குறித்தும், 2027 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவாரா என்பது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு ரோஹித் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனால் கம்பீர், ரோஹித் சர்மாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், ரோஹித் சர்மா சரியாக ரன் குவிக்காத நிலையிலும் கம்பீர் அவருக்கு ஆதரவாக இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, "ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட்டுக்காக ஏற்கனவே பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். எனவே, அவரது எதிர்காலம் குறித்த தேவையற்ற விமர்சனங்களை மனதில் கொள்ளாமல், அவர் தனது இயல்பான பாணியில் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். அவருக்குத் தேவையான மன அமைதியையும், ஆதரவையும் வழங்க அணி நிர்வாகம் தயாராக உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
சுப்மன் கில்லின் தலைமையின் கீழ் விளையாடி வரும் ரோஹித், 13 ஒருநாள் போட்டிகளில் 46.91 சராசரியுடன் 563 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 286 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 இரட்டை சதங்கள் மற்றும் 33 சதங்களுடன் 11,731 ரன்கள் குவித்து பெரும் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சொதப்பிய ரோஹித் சர்மா, ஜூலை 16 அன்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டியில் கம்பீரின் முழு ஆதரவோடு மீண்டும் அதிரடி ஆட்டத்திற்கு திரும்புவாரா? என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications

