டோமினிக்கா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது 10வது சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் சர்மா கடைசியாக பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் சதம் அடித்தார்.
அதன் பிறகு கடந்த எட்டு இன்னிங்ஸ்களாக ரோகித் சர்மா ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வந்தார். மேலும் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் தனது விக்கெட்டை இழந்து வந்தார்.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய சைக்கிள் தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. இந்திய அணி பல்வேறு மாற்றங்களை சந்திக்கும் இந்த தருணத்தில் ரோகித் சர்மாவுக்கும் கடும் நெருக்கடி இருந்தது. எப்போதெல்லாம் பிரச்சனைகள் எழுகிறதோ அப்போதெல்லாம் சாம்பியன் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதிலடி கொடுப்பார்கள்.
அந்த வகையில் ரோகித் சர்மா தாம் ஒரு சாம்பியன் என்பதை இன்று நிரூபித்து விட்டார். கடினமான ஆடுகளத்தில் ரோகித் சர்மா சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவிச்சு பலம் குன்றியதாக கருதப்பட்டாலும், ஆடுகளம் இந்திய வீரர்களுக்கு கடும் சவால்களை கொடுத்தது. இதில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். தன்னுடைய அரை சதத்தை 106 பந்துகளில் பூர்த்தி செய்த ரோகித் சர்மா பிறகு ஜெய்ஸ்வாலுக்கு நல்ல கம்பெனி கொடுத்து பார்ட்னர்ஷிப்பை உயர்த்தினார்.
தமக்கு கிடைத்த வாய்ப்பையும் ரன்களாக மாற்ற ரோகித் சர்மா தவறவில்லை. இதனால் 220 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா தன்னுடைய பத்தாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 10 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். 103 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜெய்ஸ்வாலும் சதம் அடித்து சிறப்பாக விளையாடினார். இதனால் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக ரோகித் சர்மா ஏழு சதம் மற்றும் நான்கு அரை சதம் அடித்து தாம் ஒரு ஜாம்பவான் என்பதை நிரூபித்துள்ளார்.