ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மா அதிரடி சதம் அடித்துள்ளார். உலகத் தரவரிசையில் நம்பர் 1 ஒருநாள் போட்டி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா , 2027 உலககோப்பையில் இடம்பெற வேண்டுமா என்று விவாதம் எழுந்த நிலையில், மீண்டும் தனது பேட் மூலம் அவர் பதிலடி தந்துள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் சிக்கிமுக்கு எதிராக நடந்த இப்போட்டியில் 38 வயதான ரோஹித், வெறும் 62 பந்துகளில் சதத்தை எட்டி அசத்தினார்.தனது சதத்தை எட்டுவதற்கு முன், 27 பந்துகளில் அரை சதம் அடித்திருந்த ரோஹித், மொத்தமாக 8 பவுண்டரிகளையும் 8 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு, 21வது ஓவரில் ஒரு சிங்கிள் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.

அவர் தொடக்கம் முதலே அதிரடி காட்டி சிக்கிம் அணியின் பந்துவீச்சை வலுவிழக்கச் செய்தார்.ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்வதைக் காண சவாய் மான்சிங் மைதானத்தில் 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை துளியும் ஏமாற்றாமல் அவர் விளையாடினார்.
முன்னாள் இந்திய கேப்டனான ரோஹித், அங்கிரீஷ் ரகுவன்ஷியுடன் முதல் விக்கெட்டுக்கு 19.4 ஓவர்களில் 141 ரன்கள் குவித்தார். இதில் ரகுவன்ஷி 58 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோஹித் கடைசியாக 2018-ல் மும்பைக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிக்கிமுக்கு எதிரான இந்த 62 பந்து சதம், ரோஹித்தின் 50 ஓவர் போட்டி வரலாற்றில் அதிவேக லிஸ்ட் ஏ சதம் ஆகும். இதற்கு முன்னர், 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் 63 பந்துகளில் அடித்த சதமே அவரின் அதிவேக லிஸ்ட் ஏ சதமாக இருந்தது. அந்தப் போட்டி அக்டோபர் 11, 2023 அன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக அவர் அடித்த இரண்டாவது சதம் இது. தனது அறிமுகப் போட்டியில், 2008 ஆம் ஆண்டில், அவர் 3-வது வீரராக களமிறங்கி முதல் சதத்தை அடித்தார். இந்த தொடரில் அவர் மும்பை அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.