மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஸ்டைலில் இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் பாராட்டியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு இந்திய அணியின் ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்துள்ளார். தொடக்கம் முதலே ஒவ்வொரு வீரரின் மீதும் நம்பிக்கை வைத்து பிளேயிங் லெவனில் இடமளித்து வரும் ரோகித் சர்மா, கேப்டன்சியில் வேறு மாதிரி செயல்பட்டு வருகிறார்.

ஃபார்மின்றி தவித்த ஸ்ரேயாஸ் ஐயரை மாற்றாமல் பிளேயிங் லெவனில் சேர்த்து வந்ததன் காரணமாக, கடைசி 2 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அதேபோல் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதால், எந்த அழுத்தமும் இல்லாமல் முகமது ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் மூலம் திட்டத்தை மாற்றியது இந்திய அணி கற்பனை செய்ய முடியாத பலத்தை அளித்துள்ளது.
அதேபோல் ரோகித் சர்மாவின் பவுலிங் சேஞ்ச் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் பேசுகையில், காயமடைந்த வீரர்களான கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா உள்ளிட்டோர் மீது ரோகித் சர்மா தீவிர நம்பிக்கை வைத்திருந்தார். அதேபோல், மனஉறுதி குறைந்து காணப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மீது ரோகித் சர்மா எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தார்.
அணி நிர்வாகமும், கேப்டனும் வீரர்கள் மீது வைத்த நம்பிக்கை, அவர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த காரணமாக அமைந்துள்ளதாக பார்க்கிறேன். எங்கள் வீரர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது என்ற கேப்டன் வெளிப்படையாக சொல்லும் போது, ஓய்வறையில் வீரர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் விளையாட வழிவகை செய்யும். கங்குலியும் இதுபோல் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், சேவாக் உள்ளிட்டோரை அடையாளம் கண்டறிந்து நம்பிக்கையுடன் வாய்ப்பு அளித்தார். அதுபோல் ரோகித் சர்மாவின் திறமையறிந்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது ஒரு கேப்டனாக முக்கிய பங்களிப்பதாக தெரிவித்தார்.