மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்ட நிலையில், முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மாவை மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது சிறந்த கேப்டன் என்று புகழ்ந்துள்ளார். ஆனால், புள்ளிவிவரங்களோ வேறு ஒரு விஷயத்தை சொல்கின்றன. உண்மையில் சிறந்த கேப்டன் யார்? தோனியா? ரோஹித் சர்மாவா?
ரோஹித் சர்மா, இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகத் தனது பயணத்தை அதிக வெற்றிகளோடு நிறைவு செய்துள்ளார். அவர் தலைமையில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 42 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது 75% வெற்றி விகிதமாகும். 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த இந்தியர்களில், இதுவே அதிகபட்ச வெற்றி விகிதமாகும்.
உலக அளவில் வெஸ்ட் இண்டீஸின் ஜாம்பவான் கிளைவ் லாயிட் (76.2%) மட்டுமே ரோஹித்தை விட அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளார். இந்தியாவிற்கு மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று தந்த கேப்டனான தோனியின் வெற்றி விகிதம் 55% ஆக உள்ளது. விராட் கோலியின் வெற்றி விகிதம் 68.4% ஆகும். இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, வெற்றி விகிதத்தில் ரோஹித் சர்மா, தோனி மற்றும் கோலி ஆகிய இருவரையும் விட முன்னணியில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
சமீபத்தில் ஒரு ஊடகத்திற்குப் பேட்டியளித்த வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பலரும் குறைத்து மதிப்பிடுவதாகக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "ரோஹித்தின் கேப்டன்சியை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற பிறகு, அவர் தோனிக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த கேப்டனாக உருவெடுத்துள்ளார். அவர் தன்னைப்பற்றி குறைவாகவும், அணியைப் பற்றியும், சக வீரர்களைப் பற்றியும் அதிகமாக சிந்திப்பவர். வீரர்களுக்குப் பாதுகாப்பான உணர்வைக் கொடுத்து, அவர்களை இயல்பாக விளையாட வைக்கிறார்" என்று புகழாரம் சூட்டினார்.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளது. மேலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்றார்.

தோனி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையுடன் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். இருப்பினும், வெற்றி சதவீதம் என்ற அடிப்படையில் ரோஹித் சர்மா இந்தியாவின் வெற்றிகரமான ஒருநாள் கேப்டனாகத் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இளம் வீரரான சுப்மன் கில் புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2027 உலகக் கோப்பையை மனதில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா ஒரு வீரராக அணியில் தொடர்ந்து நீடிப்பது அணிக்குக் கூடுதல் பலம். அவரது அனுபவமும், வழிகாட்டுதலும் இளம் கேப்டன் கில்லுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.