மும்பை : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவை பலவீனமானவர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேந்தர் கண்ணா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மா தற்போது பேட்டிங் ஃபார்மில் இல்லாத நிலையில் அவர் அணியில் தொடர்கிறார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேந்தர் கண்ணா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 5 சதம் அடித்தும் கருண் நாயரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாதது உண்மையிலே துரதிஷ்டவசமானது. ஆனால் தற்போது இருக்கும் அணியில் ஏற்கனவே 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் என்பதை மறந்து விட வேண்டாம்.
இப்படி இருக்கும் போது எத்தனை முப்பது வயது மேல் உள்ள வீரர்களை அணியில் தேர்வு செய்ய முடியும். கருண் நாயர் டெஸ்டில் முச்சதம் அடித்தார். அதன் பிறகு திடீரென்று காணாமல் போய்விட்டார். தற்போது மீண்டும் நிலவு வெளியே வந்திருக்கிறது. இந்த நிலவு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்காவது நிச்சயம் ஜொலிக்கும்.
ஆனால் களத்தில் வேகமாக நகரும் வீரர்கள் தான் அணிக்கு தேவை. உதாரணத்துக்கு ரோகித் சர்மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு பலவீனமானவர். அவரை பவுண்டரி லைனில் நீங்கள் நிற்க வைத்தால் ஈசியாக பேட்ஸ்மேன்கள் இரண்டு ரன்கள் எடுத்து ஓடி விடுவார்கள். ஆனால் விராட் கோலி பீல்டிங்கில் தடுமாறமாட்டார். அவர் பீல்டிங்கிற்கு என கடும் உழைப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
கில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் நல்ல முடிவாக நான் கருதுகிறேன். இளம் தலைமுறை ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவியை வாங்க வேண்டும் என தீவிரமாக இருக்கிறார்கள். ஜிம்பாப்வே தொடருக்கு கில் கேப்டனாக சென்ற போது அவர் நன்றாகவே விளையாடினார். கில் கேப்டன் ஆகவும் ஒரு வீரராகவும் நல்ல நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்தார். எனினும் கில் தன்னுடைய பேட்டிங் பார்மை மீட்க வேண்டும்.அதுதான் மிகவும் முக்கியம் என சுரேந்தர் கண்ணா கூறியுள்ளார்.