"சாரி.. உங்களை வேண்டும் என்றே ஒதுக்கவில்லை" ரோஹித் சர்மாவிடம் மன்னிப்பு கேட்ட ஸ்ரீகாந்த்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்றும் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய வலி என்றால், அது 2011 உலகக்கோப்பை அணியில் தனக்கு இடம் கிடைக்காததுதான். இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வென்று வரலாறு படைத்த அந்தத் தருணத்தில், அணியில் இடம்பெற முடியாமல் போனது குறித்து ரோஹித் பலமுறை வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தவறுக்காக ரோஹித் சர்மாவிடம் நேரில் மன்னிப்பு கேட்டதாக முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.
2011 உலகக்கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்தபோது ஸ்ரீகாந்த் தான் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தார். அப்போது ரோஹித் சர்மா மிகச்சிறந்த இளம் வீரராகத் திகழ்ந்தும், அவர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது குறித்துப் பேசியுள்ள ஸ்ரீகாந்த், "2020-ம் ஆண்டு ஒருமுறை நான் ரோஹித்தைச் சந்தித்தபோது, 'சாரி பாஸ், உங்களை அணியில் எடுக்காதது குறித்து இப்போதும் நான் வருந்துகிறேன். ஆனால், நாங்கள் உங்களை வேண்டும் என்று ஒதுக்கவில்லை' எனக் கூறினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ரோஹித்தை நீக்கியதற்கான காரணத்தையும் ஸ்ரீகாந்த் விளக்கியுள்ளார். "1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியில் கபில் தேவ், ரோஜர் பின்னி எனப் பல ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். அதே பாணியைத் தான் 2011-லும் நாங்கள் பின்பற்ற விரும்பினோம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய 'பகுதி நேர ஆல்-ரவுண்டர்கள்' அணிக்குத் தேவைப்பட்டனர். அந்த முடிவின் காரணமாகவே ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது. அந்தத் தொடரில் யுவராஜ் சிங் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்து தொடர் நாயகன் விருது வென்றது எங்கள் முடிவிற்குச் சான்றாக அமைந்தது. இருப்பினும், ஒரு சிறந்த வீரரான ரோஹித் அந்தத் தொடரைத் தவறவிட்டது இன்றும் எனக்கு வருத்தமான ஒரு விஷயம்" என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இந்த ஒரு ஏமாற்றம் தான் ரோஹித் சர்மாவை ஒரு மாபெரும் வீரராக மாற்றியது. 2011-ல் இழந்த வாய்ப்பை ஈடுகட்ட 2015, 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளில் ரோஹித் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் விளாசி சாதனை படைத்தார். 2023-ல் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கேப்டனாக வழிநடத்தினார். தற்போது 37 வயதாகும் ரோஹித், 2027 உலகக்கோப்பையிலும் விளையாடி எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் உள்ளார்.


Click it and Unblock the Notifications

