டெல்லி: இந்திய அணி வீரர்களுடன், கேப்டன் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா இருக்கும் படத்தை பிசிசிஐ வெளியிட்டது. இதை எதிர்த்து டுவிட்டரில் பலர் கேள்வி எழுப்பினர். அந்த டுவிட்களுக்கு, ரோஹித் சர்மா லைக் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்க உள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் விருந்து அளித்தது. அந்த விருந்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில், கேப்டன் விராட் கோஹ்லிக்கு அருகில், அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா உள்ளார். இது சர்ச்சையை துவக்கி வைத்தது.
முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை, இந்திய வீரர்கள், தங்களுடைய மனைவி மற்றும் காதலியிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இந்த நிலையில் கோஹ்லியுடன் அவருடைய மனைவி மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது கேள்வியை எழுப்பியுள்ளது.
#TeamIndia members at the High Commission of India in London. pic.twitter.com/tUhaGkSQfe
— BCCI (@BCCI) August 7, 2018
பிசிசிஐயின் இந்த நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பி பலர் டுவிட்டரில் பதிவிட்டனர். அதில் சிலர், டெஸ்ட் போட்டிகளில், 58.19 சராசரி உள்ள ரோஹித் சர்மாவை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த டுவிட்களுக்கு ரோஹித் சர்மா லைக் கொடுத்துள்ளார். பிசிசிஐக்கு எதிரான டுவிட்டுக்கு ரோஹித் லைக் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.