டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய வீரர் ஜடேஜா அரை சதம் அடிக்கும் தருவாயில் இருந்த போது கேப்டன் ரோகித் சர்மா அவசரக் கதியில் டிக்ளேர் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய ஓவர்கள் இல்லை என்றால் கேப்டன்கள் எதிரணியின் 10 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும் என்பதற்காக டிக்ளேர் செய்வது வழக்கம்.

அப்போது ஏதேனும் வீரர்கள் அரை சதம் சதம் போன்ற மைல்கல்லை எட்டும் தருவாயில் இருந்தால் சில கேப்டன்கள் களத்திற்குள் சில வீரர்களை அனுப்பி வேகமாக இலக்கை எட்டுங்கள் என்று கூறி செய்தி அனுப்புவார்கள். மேலும் சிலர் மைல் கல்லை எட்டடும் என்று அனுமதிப்பார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் எஞ்சி இருக்கிறது. இதில் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இதன் மூலம் இன்னிங்ஸ் வெற்றியே இந்திய அணிக்கு கிடைக்கும் தருவாயில் இருந்தது. நிலைமை இப்படி இருக்க அவசரகதியில் டிக்ளேர் செய்ய வேண்டும் என்ற சூழலே இல்லை. இந்த நிலையில் நட்சத்திர வீரர் ஜடேஜா கடுமையான சூழலில் 82 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஜடேஜா தன்னுடைய 19 ஆவது அரை சதத்தை அடித்து இருந்திருப்பார். அதற்கு வெறும் 13 ரன்களே தேவைப்பட்டது. எனினும் இது குறித்து கண்டுகொள்ளாத ரோகித் சர்மா, நீங்கள் விளையாடி கிழித்தது போதும் சீக்கிரம் வாருங்கள் என்பது போல் சைகை செய்து டிக்ளர் செய்தார்.
இதனை அடுத்து ஜடேஜா தனது அரை சதத்தை அடிக்க முடியாத விரக்தியில் பெவிலியன் நோக்கி சென்றார். நாங்கள் டிக்ளேர் செய்யப் போகிறோம். சீக்கிரம் அரைசதம் கடந்து விடு என களத்திற்கு ரோகித் சர்மா ஒரு செய்தியை அனுப்பி இருந்தாலே ஒரே ஓவரில் ஜடேஜா அந்த மைல் கல்லை எட்டிருப்பார். ஆனால் ரோகித் சர்மா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக டிக்ளேர் செய்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.