மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான தொடக்கத்தை பெற்றிருக்கிறது.
இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் இம்முறை உலகக் கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள். இந்த நிலையில் உலககோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நிகழ இருக்கிறது.

அதன்படி உலகக் கோப்பையை வென்றாலும் வெல்லாவிட்டாலும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது. ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயது மற்றும் 183 நாட்களை கடந்து இருக்கிறார். இதனால் இனி வளரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க ரோகித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் இனி 50 ஓவர் கிரிக்கெட்டை பொருத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு பிறகு பெரிய ஐசிசி தொடர் என்றால் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்தான்.
இந்தப் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டுமென்றால் 38 வயது ஆகிவிடும். இதனால் தற்போதைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க ரோஹித் சர்மா முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் ஒரு நாள் போட்டிக்கான புதிய கேப்டனாக கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹர்திக் பாண்டியா ஏற்கனவே டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்கிறார்.
ஆனால் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் ஏற்பட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் சென்று விடுகிறார். மேலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி கடும் விமர்சனத்திற்கு ஆளானது. ஆனால் கே எல் ராகுல் காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு முற்றிலும் வேறு ஒரு நபராக திகழ்கிறார்.
ரோகித் சர்மா இல்லாத நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்றது, உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேனாக ஜொலிப்பது என கே.எல் ராகுலின் செயல்பாடு அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. இதன் காரணமாக கேஎல் ராகுலுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.