போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார்.
இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை அடுத்து போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஜெயஸ்வால் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என 74 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். மறுமுனையில் ரோகித் சர்மாவும் அவருக்கு நல்ல துணையாக நின்றார். இதனால் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்களை குவித்தது.
இதனால் இந்த டெஸ்டில் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 10 ரன்களில் வெளியேற ரோகித் சர்மா மீது அழுத்தம் ஏற்பட்டது. இதன் அடுத்து விராட் கோலியும் ரோகித் சர்மாவும் இணைந்து விளையாட தொடங்கினர். முதல் டெஸ்டில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்டிலும் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரோகித் சர்மா வாரிக்கன் பந்துவீச்சில் 80 ரன்களில் போல்டானார். ரோகித் சர்மா கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்து இருக்கலாம். இந்த டெஸ்டில் ரோகித் சர்மா 80 ரன்கள் அடித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சேர்த்தார். மேலும் தொடக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு கிடைத்தது.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக களமிறங்கிய தொடக்க வீரர்களில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். முதலிடத்தில் 39 இன்னிங்ஸுடன் சேவாக் இருக்க ரோகித் சர்மா 40 இன்னிங்ஸ் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவர் கவாஸ்கர்,கம்பீர், ஷிகர் தவான், முரளி விஜய், நவஜித் சிந்து, கே எல் ராகுல் ஆகியோர்களின் ரெக்கார்டுகளை ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார்.