
4 ஐபிஎல் கோப்பைகள் வெற்றி
இந்திய அணியில் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டனாக விளங்குகிறார் ரோகித் சர்மா. இந்திய அணியில் இவரது சாதனைகள் அளப்பரியது. இதேபோல ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் ரோகித் சர்மா தன்னுடைய அணிக்கு இதுவரை 4 கோப்பைகளை வெற்றிப்பரிசாக அளித்துள்ளார்.

நிதானத்தை கைவிடாதவர்
சிறப்பான சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரோகித் சர்மா, எந்த சூழலிலும் தன்னுடைய நிதானத்தை கைவிடாமல் ஆடக்கூடியவர். இதன்மூலம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில், ரோகித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி இருவரும் அணி வீரர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர்கள் என்று பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா பாராட்டு
இந்திய அணியின் அடுத்த எம்எஸ் தோனி ரோகித் சர்மாதான் என்றும் ரெய்னா புகழ்ந்துள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வெற்றிக் கூட்டணியில் ரோகித் சர்மாவின்கீழ் தான் விளையாடியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ரெய்னா, தன்னுடைய அணியின் ஒவ்வொரு வீரரையும் கேப்டனாக கருதி ரோகித் சர்மா முக்கியத்துவம் தருவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னிருந்து வழிநடத்துவார்
தன்னுடைய அணி வீரர்களுக்கு ரோகித் சிறப்பான தன்னம்பிக்கையை தொடர்ந்து அளிப்பார் என்றும் மேலும் அணியை முன்னிருந்து வழிநடத்துவார் என்றும் சுரேஷ் ரெய்னா மேலும் கூறினார். தோனியை காட்டிலும் ஐபிஎல்லில் அதிகமான கோப்பையை ரோகித் வென்றுள்ள போதிலும் இருவரும் ஒரேமாதிரியான திறமைகளை கொண்டவர்கள் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications