மும்பை : ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அந்த அணி எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்று வருகிறது.
ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை விரும்பாத மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அந்த அணியை பின்தொடர்வதை நிறுத்தி உள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் அந்த அணியை பின்தொடர்வதை நிறுத்தி உள்ளனர். ட்விட்டரில் 4 லட்சம் பேர் பின் தொடர்வதை நிறுத்தி இருக்கின்றனர். இதற்கு ஒரு வகையில் ரோஹித் சர்மா தான் காரணம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து ரோஹித் சர்மா ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தால் கூட ரசிகர்கள் இந்த அளவுக்கு கோபம் கொண்டு இருக்க மாட்டார்கள்.
ஆனால், பத்து ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை தான் நீக்கப்பட்டது குறித்தும், ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதில் இருந்தே இந்த கேப்டன் மாற்றம் சுமூகமாக நடைபெறவில்லை என்பது தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா இரண்டு ஆண்டுகள் முன் மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட போதே அந்த அணியின் ரசிகர்கள் அவர் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்தனர். பாண்டியா புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பேசி கேப்டன் பதவிக்காக அங்கே சென்று விட்டார். அவரின் விருப்பத்தின் பேரில் தான் மும்பை அணி நிர்வாகம் அவரை விடுவித்து இருக்கிறது என கூறப்பட்டது. அப்படி அணியை விட்டு விலகிய ஹர்திக் பாண்டியாவை இப்போது அணிக்குள் அழைத்து வந்ததோடு அவரை கேப்டனாகவும் நியமித்து இருப்பது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
மேலும், ரோஹித் சர்மா இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் என்ன என்பதும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. சில லட்சம் ரசிகர்கள் விலகி உள்ள நிலையில், மீதமுள்ள ரசிகர்களை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகளால் மட்டுமே அமைதிப்படுத்த முடியும்.