டெல்லி: ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரியவராக இருந்தாலும், பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா ஒரு சீசனில் 600 ரன்களைக் கடந்ததில்லை என்றும், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் விராட் கோலியைப் போல 600 ரன்களைக் குவித்துத் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகத் திகழும் ரோஹித் சர்மா, பேட்டிங்கில் பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடியிருந்தாலும், ஒரு சீசனில் 600 ரன்கள் என்ற மைல்கல்லை இதுவரை எட்டியதில்லை. 2013 ஆம் ஆண்டு சீசனில் 538 ரன்கள் குவித்ததே அவரது அதிகபட்சமாக உள்ளது. மறுபுறம், விராட் கோலி போன்ற வீரர்கள் பலமுறை இந்த மைல்கல்லை எளிதாகக் கடந்துள்ளனர்.
இந்தச் சூழலில், தனது யூடியூப் பக்கத்தில் பேசிய முகமது கைஃப், ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பேட்டிங் புள்ளிவிவரங்கள் குறித்து தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார்.

"நாம் எப்போதும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் அனுபவம் குறித்தே பேசுகிறோம். அதற்காக அவருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஒரு சீசனில் 700 - 800 ரன்களை குவித்ததில்லை. அவரை விராட் கோலியுடனோ அல்லது மற்ற பேட்ஸ்மேன்களுடனோ ஒப்பிடும்போது, அவர் 600 - 700 ரன்களை எட்டுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றுவிடுவார்" என்று கைஃப் குறிப்பிட்டார்.
கடந்த 2025 ஐபிஎல் சீசனில், ரோஹித் சர்மா 15 இன்னிங்ஸ்களில் 4 அரை சதங்களுடன் 418 ரன்களை 149.29 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்திருந்தார். இருப்பினும், இது போதாது என்பதே கைஃபின் வாதமாக உள்ளது.
மேலும், சமீபத்தில் ரோஹித் சர்மா தனது உடல் எடையைக் குறைத்து மிகவும் ஃபிட்டாகக் காட்சியளிப்பதையும் சுட்டிக்காட்டிய கைஃப், இதுவே அவர் ரன் குவிக்க சரியான தருணம் என்கிறார்.
"இந்த முறை அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், 500 அல்லது 600 ரன்கள் என்ற இலக்கைக் கடப்பதுதான். சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்கள் 750 ரன்கள் வரை குவிக்கிறார்கள். ரோஹித் சர்மாவும் தற்போது உடல் தகுதியுடன், நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே, இந்த ஐபிஎல் தொடரில் ரன் குவிக்க வேண்டும் என்ற பெரும் பசியுடன் அவர் களமிறங்குவார் என நம்புகிறேன்" என்று கைஃப் மேலும் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் அல்லது டிரேட் செய்யப்படலாம் எனத் தகவல்கள் பரவின. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை அணி நிர்வாகம், அவரை ₹16.30 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது.
தற்போது இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டிலுமே கேப்டன்சி பொறுப்பிலிருந்து விடுபட்டுள்ளதால், ரோஹித் சர்மா தனது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது கைஃப் வைத்துள்ள இந்த "600 ரன்கள்" சவாலை அவர் ஏற்று, தனது பேட்டிங் திறமைக்கு முழு நியாயம் சேர்ப்பாரா? என்று பார்க்கலாம்.