“ரோஹித் சர்மா இந்திய அணியில் இருக்கலாமா?”.. பிசிசிஐ அவசரக் கூட்டம்.. 2027 உலகக்கோப்பை பற்றி முடிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி குறித்து விவாதிக்க பிசிசிஐ அவசர ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 3 அன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சீனியர் வீரர் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தேசிய சிறப்பு பயிற்சி மையத்தின் தலைவர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும், கேப்டன்கள் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் இதில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

2027 ஒருநாள் உலகக்கோப்பையில் ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்யும் திட்டம் இல்லை என்று தேர்வுக் குழுவினர் ஏற்கனவே அவரிடம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுவார் என வதந்திகள் பரவின. ஆனால், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாகப் பேசியது தேர்வு குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிசிசிஐ மற்றும் தேர்வு குழு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரோஹித், கடைசி போட்டியில் 138 ரன்கள் குவித்து தனது ஃபார்மை நிரூபித்தார். ரோஹித் ஆரம்பத்தில் சொதப்பிய போது, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என்ற விவாதமும் எழுந்தது. ஆனால், அவர் அடுத்த உலகக்கோப்பை வரை அணியில் நீடிப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இந்தியாவின் அடுத்த ஒருநாள் தொடர் வரும் நவம்பரில் நடக்க உள்ளது. நியூசிலாந்திற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரும், பின்னர் ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளன. இந்த பிசிசிஐ கூட்டத்தின் முடிவுகள் அடிப்படையிலேயே அந்த தொடர்களுக்கான அணித் தேர்வு இருக்கும்.


Click it and Unblock the Notifications
