துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,988 ரன்களை 268 போட்டிகளில் எடுத்துள்ளார். இன்னும் 12 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அவர் 11,000 ஒருநாள் போட்டி ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது இந்திய வீரர் மற்றும் பத்தாவது உலக அளவிலான வீரர் என்ற சாதனையை அவர் செய்வார்.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 260 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்திருக்கிறார். அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினால், விரைவாக இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைச் செய்வார்.
முன்னதாக விராட் கோலி 222 இன்னிங்ஸ்களில் 11,000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டி இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார். சச்சினின் முந்தைய சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.
இது மட்டுமின்றி, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தால், வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு உலகக் கோப்பை மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் சதம் அடித்த சாதனையைச் செய்வார். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிராக 2015 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகளில் ரோஹித் சர்மா சதம் அடித்து இருக்கிறார். மேலும், இந்தப் போட்டியில் சதம் அடித்தால், அது ரோஹித் சர்மாவின் 50ஆவது சர்வதேச சதமாக அமையும்.
வங்கதேச அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், இது கேப்டனாக இந்திய அணிக்கு 100ஆவது வெற்றியைப் பெற்றுக் கொடுத்த பெருமையை ரோஹித் சர்மா பெறுவார். இதற்கு முன் முகமது அசாருதீன், தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே 100 போட்டிகளில் இந்திய அணியை வெற்றிகளைப் பெறச் செய்துள்ளனர்.