
இறுதி சுற்று
சுமார் 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் உள்ள இந்திய அணி இந்த முறை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என முனைப்பு காட்டுகிறது. ஆனால் அதற்கு ஐபிஎல் தொடரே தடையாக வந்து நின்றுள்ளது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி, மே 28ம் தேதியன்று இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடர் முடிந்த ஒரே வாரத்தில், அதாவது ஜூன் 7ம் தேதி முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று தொடங்கவுள்ளது.

பெரும் சிக்கல்
இந்தியாவின் முன்னணி வீரர்கள் அனைவருமே ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர். எப்படி அவர்கள் பணிச்சுமையை குறைத்து, டெஸ்ட் ஃபார்மெட்டிற்கு மாறுவார்கள் என்ற கவலை ரசிகர்களிடம் உள்ளது. இதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து களம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே அங்கு சென்று தயாராக வேண்டும். இதனை கையாள்வதில் தான் பிசிசிஐ-க்கு சவால் உள்ளது.

ரோகித் பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், எங்களுக்கு இது சற்று கடினமான ஒன்று தான். அனைத்து வீரர்களுடனும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்துவோம். அவர்களின் பணிச்சுமைகளை பிசிசிஐ கண்காணித்துக்கொண்டே இருக்கும். மே 21ம் தேதிக்கு பின் 6 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பெறாமல் வெளியேறிவிடும். எனவே அப்போது எந்தெந்த வீரர்கள் ஃப்ரீயாக இருக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பவுலிங் சிக்கல்
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் டியூக் வகை பந்துகளை அனுப்பி வைத்து வருகிறோம். எப்போதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் அந்த பந்தில் பயிற்சி பெறுவார்கள். ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்லும் ஒரு சில வீரர்கள் மட்டும் முன்கூட்டியே இங்கிலாந்து செல்ல முடியாது. எனினும் அது பெரிய பிரச்சினையாக இருக்காது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











